யாழ் இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவி. நன்றாக நடனமாடக்கூடிய மாணவி, நன்றாக படிக்ககூடிய மாணவி…. இந்த சிறு வயது மாணவியின் வாழ்கையை தமது கவனக்குறைவால் அழித்துள்ளார்கள் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர். எந்த அளவு எதிர்பார்ப்புடன், கனவுடன் இந்தக் குழந்தையை அவர்களது பெற்றோர் வளர்த்திருப்பார்கள்.
இந்த குழந்தை யாழ் நோதேன் வைத்தியசாலையில் குழந்தை வைத்தியநிபுணரிடம் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றச் சென்ற சிறுமியை குறித்த நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியுள்ளார். அந்தச் சிறுமியின் பெற்றோரும் அங்கு குழந்தையை அனுமதித்துள்ளார்கள்
போதனைா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட கனிலா வினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
கனிலா செலுத்தும்போது கை நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதனால் கைக்கு இரத்த ஓட்டம் செல்ல முடியாமல் கை செயலிழந்துள்ளது. இதன் காரணமாகவே கையை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இரவு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் சிறுமிக்கு கனூலா போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி தனக்கு கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளதாக சிறுமி அழுது புலம்பியுள்ளார். அடுத்தநாள் கை வீக்கமடைந்ததையடுத்து கனூலா அகற்றப்பட்டுள்ளது.
பின் சோதனை செய்ததில் கையிற்கு இரத்த ஓட்டம் இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாத காரணத்தால் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி கனுாலா போட்ட பின் தொடர்ச்சியாக வலியால் கத்தி குளறிய போதும் 36 மணி நேரமாக சிறுமியை குறித்த விடுதிக்கு பொறுப்பான வைத்திய நிபுணரோ அல்லது விடுதி பொறுப்பாளரோ யாருமே கவனிக்கவில்லை என்பது தெளிவாகப் புலனாகின்றது.
28 ஆம் திகதி காலை கனூலா கழட்டப்பட்டுள்ளது. அப்போதே கை வீக்கம் காணப்பட்டுள்ளது.
கையிற்கு குருதி ஓட்டம் இல்லை எனக் கண்டுபிடித்து மாலை சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுத்து சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2 ஆம் திகதி இடது கை மணிக் கட்டுடன் அகற்றும் அவலம் ஏற்பட்டு விட்டது.
இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நேற்றைய தினம் இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.அந்த விசாரணைக்காக வைத்திய நிபுணர்களாக பிறேமகிருஸ்ணா மற்றும் அருள்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதோடு மத்திய சுகாதார அமைச்சிற்கும் முறையிடப்பட்டுள்ளது.